ராஜஸ்தானில் மிஸ் இளம் அழகி போட்டி- ஸ்பெயின் அழகி பட்டம் வென்றார்
ராஜஸ்தானில் நடைபெற்ற மிஸ் இளம் அழகி போட்டியில் இந்தியா அழகி 2-வது இடம் பெற்றார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆண்டுக்கான சர்வதேச மிஸ் இளம் அழகி போட்டி நடைபெற்றது. இந்தியா முதன் முறையாக இந்த மிஸ் இளம் அழகி-2025 போட்டியை நடத்தியது.
இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, கனடா, போட்ஸ்வானா, கொலம்பியா, கியூபா, டொமினிகன் குடியரசு, பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, நமீபியா, நெதர்லாந்து, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, ருமேனியா, ஸ்பெயின், அமெரிக்கா, வெனிசுலா, வியட்நாம், ஜிம்பாப்வே ஆகிய 24 நாடுகளை சேர்ந்த 13 முதல் 19 வயதுடைய இளம் அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் காசியா லிஸ் மெசோ என்ற அழகி கலந்து கொண்டார்.
நீச்சல் உடை உள்பட கவர்ச்சிகரமான சுற்றுகள் இடம்பெற்றன. போட்டியில் பங்கு பெற்ற அழகிகள் தங்கள் நேர்த்தி, தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகி லோரெனா ரூயிஸ் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சர்வேதச மிஸ் இளம் அழகி பட்டம் வென்றார். 2-வது இடத்தை இந்திய அழகி காசியா லிஸ் மெசோ பெற்றார். 3-வது இடத்தை கொலம்பியா அழகி வலேரியா மொராலஸ் பெற்றார்.
போட்டிகள் குறித்து தேசிய செய்தி தொடபாளர் சர்வேஷ் காஷ்யப் கூறுகையில், “இந்த போட்டி உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. மிஸ் இளம் அழகி யுனிவர்ஸ்-2025 போட்டியை இந்தியா அடுத்த மாதம் (அக்டோபர்) நடத்தும். சுமார் 75 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள். அதிகாரப்பூர்வ தேதிகள் விரைவில் உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.