அரியானா: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய பஸ்கள் - பலர் காயம்
வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.;
சண்டிகர்,
அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அரியானாவின் ரிவாரி மாவட்டத்திற்கும் சஜ்ஜர் மாவட்டத்திற்கும் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் சென்ற பஸ்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. 4 பஸ்கள் , கார்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.