பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்

இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த உறுதியேற்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-21 20:47 IST

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இந்த உரையாடலின்போது உக்ரைன் விவகாரம், மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச் சிறந்த உரையாடலை நடத்தினேன். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் இம்மானுவேல் மேக்ரான் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த எங்கள் நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம்.

வர்த்தகப் பிரச்சினைகளில், அனைத்துத் துறைகளிலும் எங்கள் பொருளாதார பரிமாற்றங்களையும் எங்கள் மூலோபாய கூட்டாண்மையையும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டோம். இதுவே எங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான திறவுகோல்.

கடந்த பிப்ரவரியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. செயல் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, 2026-ல் புதுடெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டின் வெற்றியை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். பிரான்ஸ் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கும், 2026-ல் இந்தியா தலைமையில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குமான ஏற்பாடுகளில் இணைந்து பணியாற்ற உறுதியேற்றோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்