பெண் டாக்டர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: எந்த தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும் - குற்றவாளியின் தாய்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்று குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் கூறியுள்ளார்.;

Update:2025-01-19 20:40 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின. மறுபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.

அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. அத்துடன் நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய் தாய் 70 வயதான மாலதி ராய் கூறுகையில்,

எனது மகனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் நீதிபதி வழங்கட்டும். நீதிமன்றம் அவரை தூக்கிலிடச் சொன்னாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன். என் மகன் குற்றவாளி என்றால், அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியை நான் உணர்கிறேன் என்று உருக்கமாக கூறினார்.

இது குறித்து சஞ்சய் ராயின் சகோதரி கூறியதாவது:

எனது தம்பி செய்தது நினைத்து பார்க்க முடியாத அளவு பயங்கரமானது. இதை சொல்லும் போதே என் இதயம் உடைகிறது. இந்த தவறை அவர் செய்திருந்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்னை போன்று ஒரு பெண். அவர் எந்த குற்றத்தையும் செய்திருந்தால், அதற்கான தண்டனையை அவர் அனுபவிக்கட்டும். இந்த உத்தரவுக்கு எதிராக எங்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சய் ராய் நீதிமன்ற காவலில் இருந்த போது, தாயும், சகோதரியும் நேரில் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்