அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் ரிக்டர் 5.2, 4.7, 4.2, 4.3, 4.8 மற்றும் 4.3 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;
புதுடெல்லி,
அந்தமான் கடல் பகுதியில் நேற்று மதியம் முதல் தற்போது வரை 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நேற்று மதியம் 3.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலில் 61 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 8.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.24 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று மதியம் ரிக்டர் 4.7 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் 4.2, 4.3, 4.8 மற்றும் 4.3 ரிகடர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.