டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு தாய்லாந்து பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதற்காக இரண்டு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி அன்று தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து இங்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். விரிவான பரிசோதனையில், நான்கு டிராலி பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27.08 கிலோ எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் 54 பச்சை நிற போதைப்பொருள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு தோராயமாக ரூ.27.09 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 தாய்லாந்து பெண்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.