சின்னத்திரை நடிகையை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
சின்னத்திரை நடிகை மஞ்சுளா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் அருகே ஸ்ரீநகரில் வசித்து வருபவர் அம்பரீஷ். இவரது மனைவி மஞ்சுளா என்ற ஸ்ருதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளா சின்னத்திரை நடிகை ஆவார். அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்ய அம்பரீஷ் முயன்றார். இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பரீசை கைது செய்தனர்.
இதையடுத்து தனது மனைவியை கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றி அம்பரீஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
எனக்கும், மஞ்சுளாவுக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா நடிகையாக இருப்பதால், அடிக்கடி சின்னத்திரை படப்பிடிப்புக்கு சென்று விடுவார். 2 மகள்களையும் பார்த்து கொள்வதில்லை. மகள்கள் மீது மஞ்சுளாவுக்கு அன்பும், அக்கறையும் கிடையாது. மகள்களை நான் தான் கவனித்து வந்தேன். குடும்ப பொறுப்புகளையும் நானே பார்த்து வந்தேன். படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு மதுபான விடுதிகளுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வது மட்டுமே மஞ்சுளாவின் வேலை ஆகும்.
என்னிடம் சொல்லாமல் 15 நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிக்கு சென்று விட்டார். ரூ.25 லட்சம் கொடுத்து குத்தகைக்கு வசிக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சண்டை போட்டார். என்னையும், மகள்களையும் விட்டுவிட்டு, அண்ணன் வீட்டில் வசிக்க முடிவு செய்தார். இதுபோன்ற காரணங்களால் ஏற்பட்ட சண்டையில் மஞ்சுளாவை குத்திக் கொல்ல முயன்றேன் என்று அம்பரீஷ் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணைக்கு பின்பு அம்பரீஷ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.