மனைவி தொல்லை: திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ஆரோஹள்ளி அருகே அன்னதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30 வயது). இவருக்கும், மல்லிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. பிடதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரேவந்த்குமார் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பின்பு புதுமண தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனால் சமீப காலமாக ரேவந்த்குமாருக்கும், அவரது மனைவி மல்லிகாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரேவந்த்குமார் மனம் உடைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேவந்த்குமார் பிடதி ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னா் அங்கு வந்த ரெயில் முன்பாக திடீரென்று ரேவந்த்குமார் பாய்ந்தார். இதனால் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெங்களூரு சிட்டி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ரேவந்த்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோவில் பேசி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்பு தனது மனைவி மல்லிகா மிகுந்த தொல்லை கொடுக்கிறார்.
எனது இந்த சாவுக்கு அவரே காரணம். என்னால் உயிர் வாழவே முடியாது. அவரது தொல்லையை தாங்கி கொள்ள முடியாமல் தான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று பேசி இருந்தார். இதுகுறித்து சிட்டி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேவந்த் குமாரின் மனைவி மல்லிகாவை பிடித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.