கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ.. உணவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற இளம்பெண்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-16 06:53 IST

நகரி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியில் உள்ள மொண்டி கொல்ல தெருவை சேர்ந்த நல்லி ராஜூ (வயது 27). இவருக்கும் மவுனிகா (25) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மவுனிகாவிற்கு அதே ஊரை சேர்ந்த குண்டு உதயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த கணவர் நல்லி ராஜூ கள்ளக்காதலை கைவிடுமாறு மவுனிகாவை எச்சரித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத மவுனிகா உதயகுமாருடன் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் நல்லி ராஜூவை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் உதயகுமாரை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து உல்லாசமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டி வந்துள்ளார்.

அதன்படி கடந்த 5-ந்தேதி மவுனிகா வீட்டில் தான் சமைத்த உணவில் தனது கணவருக்கு தெரியாமல் 10 தூக்க மாத்திரைகள் கலந்து அவருக்கு பரிமாறியுள்ளார். பின்னர் கணவர் நல்லி ராஜூவுக்கு தூக்கம் வரவே அவர் அறைக்கு தூங்க சென்றுவிட்டார். பின்னர் நண்பர் மல்லிகார்ஜுனுடன் வீட்டுக்கு வந்த உதயகுமார், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தி மூச்சு திணறவைத்து கொலை செய்து விட்டார்.

அதன் பிறகு ராஜுவின் உடலை உதயகுமாரும், மல்லிகார்ஜூனும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிணத்தை வீசி விட்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து வெளியே சென்ற தனது கணவர் நல்லி ராஜூ வீடு திரும்ப வரவில்லை என்று மவுனிகா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர் 6-ந்தேதி காலை வாலிபர் பிணம் கிடப்பதை கண்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சரிபார்த்த போது கொலை நடந்த தினத்தன்று சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றுடன் உதயகுமார் சுற்றி திரிவது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

எனவே உதயகுமார் மற்றும் மவுனிகாவை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர், மவுனிகா அளித்த வாக்குமூலத்தில், கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவர் நல்லி ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமார், மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மல்லிகார்ஜூன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்