மத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவா? போலீசார் விளக்கம்

சுரேஷ் கோபி, அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று திருச்சூர் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.;

Update:2025-09-18 20:46 IST

திருச்சூர்,

போலி ஆவணங்கள் தயாரித்து வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்ததாக கிடைத்த புகார் தொடர்பாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி, அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று திருச்சூர் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரதாபன் திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். அதில், திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மந்திரியான சுரேஷ் கோபி, அவரது சகோதரர் போலி ஆவணங்கள் தயாரித்து திருச்சூரில் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆவணங்களை கேட்டு மாவட்ட கலெக்டர், தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் அளித்தோம். ஆனால், அதற்கான ஆவணங்களை தரவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாகவும், அதனை நிரூபிக்கவும் போதுமான ஆதாரங்களை புகார்தாரர் தரவில்லை.

இந்தநிலையில் திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனர் இளங்கோ கூறும்போது, போலி ஆவணங்கள் தயாரித்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி, அவரது சகோதரர் மீதான புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. இதனால் மத்திய மந்திரி, அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. அத்துடன் இதுகுறித்து மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடரலாம். அல்லது ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெறும் என்றார். இதையடுத்து முன்னாள் எம்.பி. பிரதாபன் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்