சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி

பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.;

Update:2025-11-19 05:25 IST

சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால், நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்பு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டது.

Advertising
Advertising

கூட்ட நெரிசல் காரணமாக நேற்று 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பம்பையிலும் கூட்டம் அதிகமாவதால் நேற்று மாலையில் நிலக்கல்லில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இதனிடையே நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். அதாவது, கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதி (வயது59). இவர் நேற்று காலை தனது கணவர் மற்றும் அய்யப்ப குழுவினருடன் சபரிமலைக்கு வந்தார். இந்த குழுவினர் பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கணவர் மற்றும் சக பக்தர்கள் மீட்டு பம்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் கூறியதாவது:-

சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். முதல் நாள் தரிசனம் செய்யும் பக்தர்கள் மறுநாள் நெய்யபிஷேகம் முடிந்த பின்னரே மலை இறங்குகிறார்கள். இதன் காரணமாக சன்னிதானம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகிறார்கள்.

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக மலை இறங்க வேண்டும்.

உடனடி தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க முடியும். இதனால் தரிசனத்திற்கு கால தாமதம் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பயண திட்டத்தை அமைக்க வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் அந்த நாளில்தான் தரிசனம் செய்ய வரவேண்டும். முன்கூட்டியே சபரிமலைக்கு வருவதை தவிர்க்கவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்