ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற பெண்... துரத்திச் சென்று சுட்டுக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பயங்கரம்

அரவிந்துக்கு ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் திருமணம் ஆகி, ஒரு குழந்தையும் இருந்துள்ளது.;

Update:2025-09-21 20:52 IST

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் நந்தினி தம்பதிக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அன்குஷ் பதக்கின் பிறந்தநாள் பார்ட்டிக்கு நந்தினி சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை நந்தினி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அரவிந்துக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நந்தினி, அன்குஷ் மற்றும் அவரது நண்பர் கல்லு ஆகிய 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். இதனை நந்தினியின் கணவர் அரவிந்த் பார்த்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அரவிந்த், மற்றொரு ஆட்டோவில் அவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அரவிந்த் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நந்தினியை நோக்கி சுட்டார். இது குறித்து தகவலறிந்து உடனடியாக போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போது போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டி அரவிந்த் மிரட்டியுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனிடையே துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நந்தினி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் பட்டப்பகலில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இதற்கு மத்தியில் மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது, நந்தினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அரவிந்துக்கு ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் திருமணம் ஆகி, ஒரு குழந்தையும் இருந்துள்ளது.

இந்த உண்மை நந்தினிக்கு தெரியவந்தபோது, அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு நந்தினி மீது அரவிந்துக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை நந்தினி மீது கார் ஏற்றி கொலை செய்யவும் அரவிந்த் முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாகவும் நந்தினி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அரவிந்த், தன் மீதான வழக்கை வாபஸ் வாங்குமாறு தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது பெற்றோரை மிரட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த சூழலில்தான் நந்தினி தனது ஆண் நண்பர் அன்குஷுடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அரவிந்த் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அரவிந்த் போலியான ஏ.ஐ. வீடியோக்களை உருவாக்கி தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். புகார் அளித்துவிட்டு எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பியபோதுதான் நந்தினியை அரவிந்த் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்