நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கல்லியூரை சேர்ந்தவர் சுனில்(வயது 42). தொழிலாளி. இவரது மனைவி பின்சி(36). இவர் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே சுனில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இதனால் தினசரி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மனைவி பின்சி இரவு நேரங்களில் அடிக்கடி யாரிடமாவது செல்போனில் பேசினால் சுனிலுக்கு பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று காலை வழக்கம்போல் பின்சி வேலைக்கு வராததையடுத்து சக தூய்மை பணியாளர்கள் பின்சியை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பின்சி வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து நேமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பின்சியின் கணவர் சுனிலை பிடித்து விசாரித்தனர். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு பின்சியை அவர் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.