121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை

சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.;

Update:2025-09-27 05:19 IST

கோப்புப்படம் 

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்துகிறார்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.9.1905 அன்று பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.

1942-ம் ஆண்டு முதன்முதலாக 'மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் 'தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு தடை செய்தும்கூட, இவர் தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்.

1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் 'தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார். தொடர்ந்து, 'மாலை மலர்' என்ற மாலைப் பத்திரிகையையும் 'ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.

நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

கருணாநிதி முதல்-அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் 1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்று கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் “தமிழர் தந்தை” என அன்போடு அழைக்கப்படுகிறார்.

சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் தேதி அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்