கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி
மாயமான மாணவர் ஒருவரை தேடும் பணியில் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.;
சென்னை,
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் பெசன்ட் நகர் கடலுக்கு வந்தனர்.
பின்னர் பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் கவர்னர் கெஸ்ட் ஹவுஸ் அருகே கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய மூன்று பேரும் ஆழத்திற்கு இழுத்து செல்லபட்டனர். இதை பார்த்து உடன் வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் வந்து உடனடியாக கடலில் இறங்கி பிரகாஷ் மற்றும் முகமது ஆதில் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் இறந்து கிடந்தார். முகமது ஆதில் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை கொண்டு சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் மாணவன் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலில் மூழ்கிய ரோகித் சந்திரனை மீனவர்கள் உதவியுடன் போலீசார் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை உடல் ரோகித்சந்திரனின் பட்டினப்பாக்கம் கடற் கரையில் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.