12 ஆண்டுகளாக பிரதமர் மோடி பிறந்த நாளில் இலவச டீ வழங்கும் வியாபாரி
மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார்.;
சென்னை,
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பாஜகவினரும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள். இந்தநிலையில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார் . மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன் மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர். மேலும் தமிழிசை சவுந்தரராஜன் டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.