170 தொகுதிகளை குறிவைக்கும் அதிமுக: வேட்பாளர் தேர்வு- எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணல்
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தவிர்த்து, 170 தொகுதிகளில் அ.தி.மு.க. களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;
சென்னை,
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.அந்த வகையில்.அ.தி.மு.க.வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் 10, 12, 13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த நேர்காணலின்போது, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தகுதியான நபர்களை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்துள்ளார்.
இதன் பிறகு, பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஆகிய காரணங்களால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஐந்தாவது நாள் நேர்காணல் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.
இன்று காலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடத்தப்பட்டதுஇதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
இன்று மாலையில், திருவண்ணாமலை கிழக்கு மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதன் பின்னர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.தற்போது நடைபெறுவது முதல் கட்ட நேர்காணல் என்றும், அடுத்தடுத்து 2 அல்லது 3 கட்ட நேர்காணல்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தவிர்த்து, 170 தொகுதிகளில் அ.தி.மு.க. களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை கூட்டணிக் கட்சிகளுக்கு 2 அல்லது 3 கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால், 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து, குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள், டி.டி.வி. தினகரனுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 தொகுதிகள் வரை, சில கட்சிகளுக்கு ஒரு தொகுதி வரை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுதொடர்பான தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவடைந்து, எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். தொகுதிப் பங்கீடு முடிந்ததும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.