சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயற்சித்துள்ளார். அவரை காவலர்கள் பிடித்து இழுத்து சென்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான் என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.
விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், இத்தகைய செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சனாதனத்தை அவமதிப்பதா? என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை நோக்கி அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புனித இடமான நீதிமன்றத்தில் எந்த வகையான வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பரபரபரப்புக்கு மத்தியில் நீதிபதி கவாய் ஆற்றிய அமைதியான மற்றும் கண்ணியமான பதில், அவரது நேர்மை, தைரியம் மற்றும் நமது அரசியலமைப்பின் கொள்கைகளில் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கைக்கு ஒரு சான்றாக நிற்கிறது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.