கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது

கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2025-09-29 17:57 IST

.சென்னை,

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

”கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்