சீமான் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

சீமான் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.;

Update:2025-09-26 20:06 IST

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழம், காஷ்மீர் பிரச்சினை, நீயூட்ரினோ மற்றும் சேலம் எட்டு வழிச்சாலை திட்டங்கள் குறித்து பேசும்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார்.

சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி துணை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது தரமணி போலீசா வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும், சீமான் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் பேசவில்லை என்றும் உள்நோக்கத்துடன் போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்