கடலூர்: லிப்டில் சிக்கிய காங். எம்.பி., ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி, லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.;
கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத், வடலுாரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றபோது, லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது.
இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விடுதி ஊழியர்கள், அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். ஆனால் அது பயனளிக்காத நிலையில், தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து, உள்ளே இருந்தவர்களை மீட்டனர். லிப்டில் இருந்த விஷ்ணு பிரசாத் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய லிப்டில் 6 பேர் சென்றதே, லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.