‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ - அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு அரசின் கருத்துகளை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.;
வேலூர்,
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துகள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில், மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை எனவும், தமிழ்நாடு அரசின் கருத்துகளை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தி.மு.க. அரசு விட்டுக்கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துரைமுருகன், “எந்தவொரு அரசாக இருந்தாலும், ஆணையமாக இருந்தாலும் மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.