பிரதமரை இழிவுபடுத்திய திமுக நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரைக் குறித்து பொது மேடையில் மலினமாகப் பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
பிரதமரைக் குறித்து தகாத வாரத்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் திமுக மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.