தாக்குதல் சம்பவம் எதிரொலி.. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் தாக்குதல் எதிரொலியாக, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி. இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்றுக்கொண்டிருந்தபோது அவரை விசிகவினர் சுற்றி வளைத்து தாக்கினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைதுசெய்யப்பட்டார். டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி பரபரப்பானது.
இந்த நிலையில், ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் தாக்குதல் எதிரொலியாக, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு;
* அடையாள அட்டை வளாகத்திற்குள் இருக்கும்போது அட்டை தெளிவாக தெரியும் வகையில் அணியப்பட வேண்டும்.
* பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நிர்வாக அனுமதி இல்லாத பகுதிகளில் செல்லக்கூடாது.
* ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டு வர அனுமதி இல்லை.
* பாதுகாப்பு பணியாளர்களின் உத்தரவை பின்பற்றி அனைத்து பாதுகாப்பு அடையாளங்கள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றவும்.
* உங்கள் அலைபேசியை அமைதியான நிலையில் (silend mode) வைத்திருங்கள்
* பார்வையாளர்கள் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது தங்களது அடையாள அட்டையினை ஒப்படைக்க வேண்டும்.
* ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல் கவனிக்கப்பட்டால், பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும்.
* தலைமை அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள், பார்வையாளர்கள் விதிமுறைகளான உடை விதிமுறைகள், ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் விதிமுறைகள் மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.