தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்

234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-26 19:37 IST

கோவை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இதற்காக இன்று காலையிலேயே தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார் விஜய். இன்று மாலை 3 மணி அளவில் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் சரவணம்பட்டிக்கு காரில் புறப்பட்டார் .அப்போது அவரது காரை பின் தொடர்ந்தவாறு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரு சக்கர வாகனத்திலும் கார்களிலும் சென்றனர்.

தொடர்ந்து தவெக நிர்வாகிகள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் வாக்குச்சாவடி முகவர்களை பார்த்து கையசைத்தார் விஜய். இதனைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் என்றாலே பல கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. இந்த கருத்தரங்கு கூட்டத்தை நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டும். குறிப்பு எடுத்துக் கொண்ட பணியாற்ற வேண்டும். தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதற்கு 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு தொண்டனை கூட இழக்கக்கூடாது.

234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும். தினமும் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். மாவட்ட செயலாளர், அணி தலைவருடன் இணைந்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். மக்களை தினமும் சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சனையை கேட்டறிய வேண்டும். பிரச்சனைகளை கண்டறிவதற்கு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும். மக்களின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

தெருவில் மின்விளக்கு எரியாவிட்டால் அதனை உடனடியாக நாமே மாற்ற வேண்டும். இது போன்ற சிறு சிறு மக்களின் பிரச்சனைகளை நீங்களே சரி செய்ய வேண்டும். ஒரு நபருக்கு 30 வாக்காளர்கள் என வாரா வாரம் அவர்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் கட்சி தலைமைக்கு கூற வேண்டும். 2026 வெற்றிக்கு பின் ஒவ்வொரு குடும்பத்தையும் விஜய் பார்த்துக் கொள்வார்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்