புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
பஸ்களுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.;
சென்னை,
போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்கு வரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆபரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் ஆபரேட்டர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ஹேமன்சந்தன் கவுடா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். அதேசமயம், பஸ்களுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.