கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
காவலர் ஒருவர் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (வயது 36). 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக இருந்தார். இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016-ல் திருமணமானது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். இந்த தம்பதியிடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்ததாம். இதனிடையே மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமியின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி அவரது தங்கையை வைத்து விக்னேஷ் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனர். இதனையடுத்து விக்னேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், கோவில்பட்டி லட்சுமிபுரம் மேலகாலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.