குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார்
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று நாராயணன் தெரிவித்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் இந்த விழாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள் என்றும், 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்றும், இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.