சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டி இணைப்பு

பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.;

Update:2025-09-08 06:47 IST

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. (இலகுரக பெட்டிகள்) என்னும் நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், திருச்செந்தூர், கொல்லம் உள்பட தென்மாவட்டங்கள் செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்னும் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படவில்லை. இந்த ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.16101), வரும் நவம்பர் 18-ந் தேதி முதலும், கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16102), வரும் நவம்பர் 19-ந் தேதி முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. மேலும், எஞ்சிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விரைவில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக தற்போது எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்