விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.;

Update:2025-10-30 08:17 IST

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் அறுவடை முடிந்துவிடும். கனமழையால் நெல்மணிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசும், முதல்-அமைச்சரும் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர். மேலும் அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் சீட்டு பெறுவதற்காக தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

தற்போது அறிக்கை விடும் த.வெ.க. தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கிருந்தார். கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ? அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.

விவசாயிகளும், விவசாயமும் தற்போது பேசும் பொருள் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு விவசாயத்திற்கான விழிப்புணர்வை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்