சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2 தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.;
சென்னை,
சாலை விபத்தில் உயிரிழந்த 2 தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்" என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், கடந்த 2.8.2025 அன்று விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த சரிதா, 12.6.2025 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன், 23.7.2025 அன்று ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன், 5.6.2025 அன்று திருவாரூர் மாவட்டத்தைச் எம்.விக்னேஷ், 5.6.2025 அன்று கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி, 23.7.2025 அன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய 6 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து; 2.6.2025 அன்று நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான கு.சரண்ராஜ், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, வீசாணம் பிரிவு ரோடு அருகில் வாகன விபத்தில் சிக்கியும், 6.9.2025 அன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான எஸ்.பிரகாசம், கீழ்அம்பி - காஞ்சிபுரம் சாலையில் இடதுபுறம் சென்றபோது வாகனம் மோதியும் சம்பவ இடத்திலேயே இவ்விரண்டு பேரும் உயிரிழந்து விட்டனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த மேற்சொன்ன இருவரின் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையினை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் கிழக்கு மாவட்டம் கு.சரண்ராஜின் மனைவி திருமதி ராசாத்தியிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் எஸ்.பிரகாசத்தின் மனைவி பி.பிரியாவிடமும் இன்று(18-10-2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.