தாய் கண்டித்ததால் விபரீதம்.. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-09-13 08:15 IST


தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு யோகஸ்ரீ (17), பானுஸ்ரீ என 2 மகள்கள் இருந்தனர். சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் வசித்து வந்தார். மேலும் அவர் கூலி வேலை செய்து வருகிறார். மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்குமாறு கூறிவிட்டு, அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கான இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த பிரியா, தனது மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.

அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பிரியா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்