ஆணவக் கொலை: கவின் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோருக்கு எம்.பி. கனிமொழி ஆறுதல்

குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார்.;

Update:2025-07-31 10:48 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்குத் தனது தாத்தாவுடன் சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சுர்ஜித், கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.

சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

கனிமொழி எம்.பி. எக்ஸ் பதிவு

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க கழக அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்