நீலகிரி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.;

Update:2025-07-20 01:35 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகள் இருந்தனர். தம்பதியின் குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடந்துள்ளது. கூட்டம் முடிந்ததும் சிறுமி உடல் சோர்வாக இருப்பதை கவனித்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளார்.

அப்போது மே மாதம் கோடை விடுமுறைக்காக சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(வயது 30) என்பவர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கும், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுப்பிரமணிக்கு 20 ஆண்டு் சிறை தண்டனையும், ரூ.15,500 அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் பி.செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்