பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது.
காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.