அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - நெல்லையில் பரபரப்பு
நெல்லை டவுனில் அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை,
நெல்லை டவுன் உழவர் சந்தை அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அதில் ஒரு வாலிபர் தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை அங்கன்வாடி மையத்தின் மீது வீசி வெடிக்க செய்துள்ளார்.
இதனை அருகே இருந்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை டவுன் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் அய்யப்பன் (வயது 22) மற்றும் ஒருவர் பெட்ரோல் குண்டுவீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அய்யப்பனை கைது செய்தனர். அய்யப்பன் மீது நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.