பொங்கல் பண்டிகை: சென்னை கடற்கரை பகுதிகளில் 233.88 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.;

Update:2026-01-18 17:58 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை. பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு 14.01.2026 முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் 14.01.2026 முதல் 17.01.2026 வரை 233.88 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதைத் தவிர்க்கும் வகையிலும், மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடற்கரைகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும் வைக்கப்பட்டு அவற்றில் குப்பைகளை போட வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறி மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் கொட்டிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி, ரூ.5,000/– வரை 241 நபர்களுக்கு ரூ.1,90,500/- அபராதத் தொகை இதற்கென நியமிக்கப்பட்ட 26 கண்காணிப்புக் குழுக்களின் வாயிலாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

எனவே, கடற்கரைப் பகுதிகளுக்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்