ராமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்த பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.;
ராமேஸ்வரம்,
இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி மண்டபம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வந்தார். அப்போது அவர் தமிழக பாராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். பின்னர் மேடையில் இருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.
இந்தநிலையில், ராம நவமியையொட்டி ராமேஸ்வரம், ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார். சிறிது நேரம் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ராமேஸ்வரத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.