முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு - செல்வப்பெருந்தகை கண்டனம்

முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-21 17:17 IST

சென்னை,

ரெயில் பெட்டிகள் குறைப்பு திட்டத்தை இந்திய ரெயில்வே திரும்பப் பெற வேண்டு என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"ரெயில்வே என்பது, தினசரி பயணியாகவோ, சுற்றுலா பயணியாகவோ, நகர்ப்புறமாகவோ அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவராகவோ, ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.

ஏழை, எளியோர் அணுகக்கூடிய ரெயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள இந்திய ரெயில்வேயின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைதூர பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்துள்ளது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மத்திய ரெயில்வே துறை பொதுப்பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் குறைக்கக் கூடாது. பெட்டிகள் குறைப்பு திட்டத்தை இந்திய ரெயில்வே திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்