கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு - திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-20 17:23 IST

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களை வழங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, “ 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 லட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)

7.7 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனை தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்” என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை மத்திய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை மத்திய அரசு தெரிந்திருந்தும் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.

மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வழங்கப்படாததற்கு பா.ஜ.க.வின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பா.ஜ.க.வினர் பரப்பி வருகின்றனர்.

கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்