இலங்கை சிறையில் இருந்து விடுதலை; 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை
இலங்கையில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா விமானத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் சென்னை வந்தனர்.;
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2, 19 மற்றும் 23-ந் தேதிகளில் 3 விசைப்படகுகளில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 விசைப் படகுகளையும் இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் சுற்றிவளைத்தது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 3 விசைப் படகுகளை பறிமுதல் செய்ததுடன், 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர், மீனவர்கள் 11 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் இருந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்தநிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
11 மீனவர்களிடம் பாஸ்போர்ட் எதுவும் இல்லாததால், விமானத்தில் அனுப்பிவைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, அவர்களுக்கு அவசரகால சான்றிதழ் வழங்கி, விமான டிக்கெட்டுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கொழும்பில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா விமானத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைத்தனர்.