பொதிகை படகு சீரமைப்பு பணி நிறைவு - இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் பொதிகை படகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.;
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை தினமும் ஏரானமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் பொதிகை படகு பழுதடைந்ததால் கடந்த மாதம் 1-ந் தேதி சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி சீரமைப்பு பணி நடைபெற்றது.
ரூ.10 லட்சத்தில் ஒரு மாதமாக நடைபெற்ற சீரமைப்பு பணி நிறைவு பெற்று நேற்று கடலில் இறக்கப்பட்டது. அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டு கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பொதிகை படகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம். திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட உள்ளனர்.