வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த உரிமையாளர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி கடிக்க விட்டு உரிமையாளர் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னையில் கடந்த சில மாதங்களாக நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேவேளை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களை வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி இதுபோன்ற நாய் வகைகளை சிலர் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதி மாரியப்பன் மற்றும் அவரது மனைவி தெருவில் நின்றுகொண்டிருந்தபோது ராட்வீலர் நாய் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், தனது ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்துள்ளார். வயதான தம்பதியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கவியரசனை கண்டித்துள்ளனர்.
ஆனால், தனக்கு காவல்துறையில் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தெரியும் என கூறி அவர்களையும் கவியரசன் மிரட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கவியரசன் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.