முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 பேரை 30 மாநகர பஸ் மூலம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களில் அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் எங்களின் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம், உள்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்-அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக தூய்மை பணியாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தூய்மை பணியாளர்களான எங்களுக்கு, எங்கள் நலனுக்காக அரசு அறிவித்த புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்களுக்கு தந்த திட்டங்களால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. முத்தாய்ப்பாக தனியாக எங்களுக்கென்று நல வாரியத்தை உருவாக்கியதற்கு, காலம் முழுவதும் நன்றி சொல்வோம்.
இந்த திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் உறுதியுடன், எங்களை மதித்து எங்களுடைய நீண்ட கால கோரிக்கையினை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தங்கள் தலைமையினை மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கும் செய்யப்படுவதைப் போல எங்கள் ஊதியத்தையும் காலத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு, தூய்மை பணியாளர்களை தாய்மை பணியாளர்கள் என போற்றுகின்ற எங்கள் முதல்-அமைச்சர் உறுதி செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் நம்புவதைப்போல் பெருநகர மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களும் நம்புகின்றோம். மரியாதையுடன், தூய்மை பணியாளர்கள் சார்பில் நன்றி.. நன்றி... நன்றி..!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.