2 தளம் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் அனுமதி - இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
இதுவரை சுமார் 1.48 லட்சம் பேருக்கு சுயசான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
பொதுமக்களுக்கு கட்டிட அனுமதியை எளிதாக வழங்குவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுயசான்றிதழ் முறையில் குடியிருப்பு கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் தரைத்தளம் மற்றும் முதல் தளம் 7 மீட்டர் உயரத்திக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக அனுமதி பெறலாம்.
அதாவது பொதுமக்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விட்டால், சுயசான்றிதழ் அனுமதி நொடியில் கிடைத்து விடும். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதுவரை சுமார் 1.48 லட்சம் பேருக்கு சுயசான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம்கொண்ட 7 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தினை மேலும் பயனுள்ளதாக்க வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி 3-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.