காங்கிரசை அவமதிக்கிறார் செந்தில் பாலாஜி; கரூர் எம்.பி. ஜோதிமணி ஆதங்கம்
கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை திமுகவில் இணைத்த செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என தமிழக காங்கிரசில் குரல் எழுந்துள்ளது. கூடுதல் தொகுதிகளை தி.மு.க., தராவிட்டால், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், கட்சி மேலிடத்தில் சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கரூர் மகளிர் காங்கிரஸ் தலைவர் கவிதா, நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, 'கூட்டணி தர்மத்தை, தி.மு.க., மீறி விட்டது. காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கொதித்துபோயுள்ளனர்.
இந்தநிலையில், கரூர் எம்.பி., ஜோதிமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.
கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.
பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.