அதிர்ச்சி சம்பவம்: 7 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கொடூர தந்தை
7 வயது மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.;
சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று பெண் ஒருவர் வந்த நிலையில், தனது தம்பியான சென்னை அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) என்பவர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளதாகவும். அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர் இது குறித்து விசாரித்த போது, சதீஷ்குமார் என்பவர் அவரது 7 வயது குழந்தையுடன் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கி இருந்ததை அறிந்தார்.
உடனே அறைக்கு சென்று பார்த்த போது, சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகில் அவரது குழந்தை ஸ்டெபி ரோஸ் (7) கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது.
இது குறித்து அறிந்த பரங்கிமலை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை ஸ்டெபி ரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின் முடிவில் போலீசார் தெரிவித்த தகவலில், "தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமார் சென்னை அயனாவரத்தில் வசித்து வந்ததுடன், ஸ்பீக்கர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ரெபேக்கா என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே தனது 7 வயது மகள் ஸ்டெபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி ரெபேக்கா அவரது கணவர் சதீஷ்குமார் மீது சென்னை ஓட்டேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு மனைவி ரெபேக்கா வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட போலீசார், ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
இதனால் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில், ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகள் ஸ்டெபியை அழைத்து தங்க வைத்த சதீஷ்குமார், மகள் ஸ்டெபியின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தியதுடன் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து குழந்தை ஸ்டெபி ரோஸ் உடல் தாய் ரெபேக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை கண்டு தாய் ரெபேக்கா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை சதீஷ்குமாரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். தற்போது சதிஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியை கொன்ற தந்தை சதீஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மகளை கொன்ற கொடூர தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா உத்தரவிட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்ட உடன் கைதிகள் வார்டுக்கு மாற்ற சொல்லி உத்தரவிடப்பட்டது.
உடல்கூறாய்வுக்குப்பின் குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்று கூறியும், உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கணவன், மனைவிக்கு இடையே நடந்த நீயா? நானா? சண்டையில் பிஞ்சு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.