திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்
சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் வழியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக் கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.