திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .;

Update:2025-07-01 19:38 IST

சென்னை,

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற 28 வயது இளைஞர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முதல் அமைச்சர்மு.க. ஸ்டாலின் பெரிய கருப்பன் மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத செயல் எனவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார். காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், எந்த ஐயப்பாடும் எழுந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: "திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை #CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். #CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்!" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்