திருத்தணி முருகன் கோவில்: நாளை மூன்றாவது நாளாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை

மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் நாளை மூன்றாவது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-02 22:59 IST

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். வாகனங்கள் செல்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், மலைப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தசூழலில் மலைப்பாதையில் தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து மலைக்கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை சீரமைப்பதற்கு, கோவில் நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தார்ச்சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. பணிகள் மூன்று நாட்களில் முடியும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோவில் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் நாளை மூன்றாவது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலைக்கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை தார்சாலையை சீரமைக்கும் பணி 01/09/2025, 02/09/2025 ஆகிய நாட்கள் நடைபெற்றது. மேற்படி பணி முடிவடையாததால் தொடர்ந்து நாளை (03/09/2025) வரை திருக்கோவில் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்